van
திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் மே 6,7-ஆம் தேதிகளில் இரு நாள்கள் வேன் மூலம் பிரசாரம் செய்ய உள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கருணாநிதி வேன் மூலம் மேற்கொள்ள இருந்த பிரசாரப் பயணங்களை ரத்து செய்துவிட்டு, பொதுக்கூட்டங்கள் வாயிலாகவே பிரசாரம் செய்வதாக அறிவித்திருந்தார். இருப்பினும், சென்னையில் மட்டும் 2 நாள்கள் வேன் மூலம் பிரசார பயணம் செய்ய உள்ளார்.
இதன்படி, மே 6-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வேன் மூலம் பிரசாரத்தைத் தொடங்கும் கருணாநிதி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், அம்பத்தூர், மதுரவாயல், பூவிருந்தவல்லி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதையடுத்து, மே 7-ஆம் தேதி மாலை 4.30 மணி மயிலாப்பூரில் இருந்து வேன் மூலம் பிரசாரம் தொடங்கும் கருணாநிதி வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.