ka
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை டெல்லியில் சந்தித்து பேசிய நடிகர் கார்த்திக், கூட்டணி குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.
நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், சில கட்சிகளுடன் இணைந்து விடியல் கூட்டணியை அமைத்து தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்கி உள்ளார். இதற்கான பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் விடியல் கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகள் பற்றிய இறுதி முடிவை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக லோக் ஜனசக்தி கட்சித்தலைவர் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் விடியல் கூட்டணியின் தேர்தல் பணிகள் குறித்தும் தொகுதிப்பங்கீடு, பிரசார உத்திகள் குறித்தும் நாங்கள் விரிவாக பேசினோம். அப்போது அவர், இந்த கூட்டணியில் சேருவது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடுவோம்.
மேலும் விடியல் கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும் என்ற விவரத்தையும் விரைவில் அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக அமைந்து வருகிறது. வருகிற தேர்தலில் இந்தக் கூட்டணி பெருமளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் விரைவில் தமிழகத்துக்கு வருகை தந்து எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தை மேற்கொள்வார். இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.