சென்னை:  ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொதுவாக சென்னை உள்பட பல பகுதிகளில் இயக்கப்படும் பயணியர் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், பலர் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் இயக்கப்படும் பயணியர் ரயில், மின்சார ரயில்கள் போன்றவற்றில்,பயணிகள், இளைஞர், இளைஞிகள், மாணவர்கள் போன்றோர் படிக்கட்டில் அமர்ந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் சக பயணிகள் ஸ்டேஷன்களில் ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில்,   ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயின் கீழ்  தமிழ்நாட்டில் தினசரி  350-க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி,  சென்னை கோட்டத்தில் மின்சார ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகிறார்கள். இதற்கிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது.

இவ்வாறு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ (அ) படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே சட்டம் 1989 பிரிவு 156-ன் கீழ் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது மற்றும் தொங்கிக்கொண்டு செல்வது  குற்றமாகும். அதை தடுக்கும் நோக்கில், சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் சாகச நடவடிக்கைகளைத் தடுக்க தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.