திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ச்சி விவசாயியை கொல்ல நடைபெற்ற முயற்சியில்  2 பேர் பரிதாபமாக பலியாகினர். இது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலசப்பாக்கம் அருகே உள்ளது  சொரகுளத்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த  சரண்ராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேணுகோபால் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு வயலில் மாடு மேய்ப்பது தொடர்பாக மீண்டும் தகராறு மூண்டதாக கூறப்படுகிறது. அசம்பவத்தன்று இரவு  சரண்ராஜ்,  அவரது மாட்டுக் கொட்டகையில் இருக்கும் இரும்பு கட்டிலில் படுத்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ரேணுகோபால், அவரது இரும்பு கட்டிலில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றுள்ளார்.

இரும்பு கட்டிலில் மின்சாரம் பாய்ந்ததால், அதிர்ச்சி அடைந்த  சரண்ராஜ் சத்தம் போடவே, அருகே இருந்த வீட்டில் உள்ள ஏழுமலை என்பவர், என்ன ஏது என்று பார்க்க அங்கே சென்றுள்ளார். அப்போது,  அங்கு ரேணுகோபால் மின்சார வயருடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும், அவரை தள்ளிவிட முயன்றுள்ளார். இதனால், மின்சார வயர்கள்,  ஏழுமலை மற்றும் ரேணுகோபால் மீது விழுந்தது. இதனால், அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சரண்ராஜ் சிறிய பாதிப்புடன் உயிர் பிழைத்தார். இதுகுறித்து சரண்ராஜ் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கலசபாக்கம் காவல்துறையினர் ஏழுமலை மற்றும் ரேணுகோபால் ஆகிய இருவரின் சடலங்களையும் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.