மதுரா

இன்று நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கலி செய்துள்ளார்.

ஏப்ரல் 26 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 28 ஆம் தேதி தாக்கல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன்  நிறைவடைகிறது. நாளை  வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 8 ஆம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் “கனவுக்கன்னி” என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராகக் களம் இறங்கி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

பிறகு 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்று தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராகக் களம் காண்கிறார். பாஜகவில் 75 வயது ஆனவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்குப் பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

இன்று பா.ஜ.க. சார்பில் மதுரா தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஹேமமாலினி மனு தாக்கல் செய்யும்  போது அவருடன் அம்மாநில நீர் சக்தித்துறை மந்திரி ஸ்வதந்த்ரா தேவ் சிங் உடனிருந்தார்.

அப்போது ஹேமமாலினி செய்தியாளர்களிடம்,

”மதுரா தொகுதியின் வளர்ச்சிக்காக மூன்றாவது முறையாக இங்கு வந்துள்ளேன். மீதமுள்ள அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பேன். மேலும் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் மதுராவில் உள்ள யமுனா நதியைச் சுத்தப்படுத்தும் பணியை முடிப்பதும், 84 கோசி பரிக்ரமா பாதை மற்றும் ரயில் பாதை அமைப்பது ஆகிய முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்.” 

என்று கூறினார்.