சென்னை:
சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பூக்கடை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது பெண்ணுக்கு அவரது பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் பயிற்சியின் போது பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி பாதிக்கப்பட்ட பெண் W-10 பூக்கடை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் குழுவினர் தீவிர விசாரணைக்கு பிறகு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நந்தனத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் (வயது 59) என்பவரை மே 29ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட நாகராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.