சென்னை
டில்லி கேபிடல்ஸ் அணி வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி அணிகளில் டில்லி கேபிடல்ஸ் அணியில் தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் விளையாடி வருகிறார். இது வரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் ஒரு விக்கட் கூட வீழ்த்தவில்லை. தற்போதைய போட்டிகளில் நன்கு விளையாடிய போதிலும் விக்கட் வீழ்த்தாமல் அஸ்வின் உள்ளார்.
தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் பல முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரபல நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் இனி ஐபிஎல் செய்திகளை வெளியிடப்போவதில்லை என நேற்று அறிவித்தது.
இந்நிலையில் அஸ்வின் தனது டிவிட்டரில், “நான் நாளை முதல் 2021 ஐபிஎல் தொடரில் இருந்து விடை பெறுகிறேன். என்னுடைய குடும்பத்தினர் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். நான் இந்த கடின நேரத்தில் அவர்களுடன் இருப்பது அவசியமாகும். சரியான திசையில் அனைத்தும் சென்றால் மீண்டும் நான் அணியில் இணைவேன் என எதிர்பார்க்கிறேன். நன்றி டில்லி கேபிடல்ஸ்” எனப் பதிந்துள்ளார்.