டெல்லி: ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில வளர்ச்சி, அரசியல் நிலவரம், மற்றும் சட்டசபை தேர்தல் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு தொகுதி மறுவரையறை . மக்களின் வாழ்வாதாரம், அரசியல் நிலவரங்கள் , விரைவில் சட்டமன்ற தேர்தலை நடத்தவும் அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன்   மத்தியஅரசு ஆலோசிக்க விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று (24ம் தேதி)  பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில்  பங்கேற்குமாறு காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு  அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கார் கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. முன்னாள் மாநில முதல்வர்கள் பஃரூப் அப்துல்லா, மெஹபூபா முப்தி, சஜாத் லோன் உள்பட 14 பேர் பங்கேற்கின்றனர். இவர்களுடன் 2019 ஆகஸ்ட் 5 க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகினற்னர்.

இந்த கூட்டத்தில் மாநில வளர்ச்சி, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தை திரும்பபெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பரிசோதனை நடத்தி, கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வருமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய தலைநகரில் ஒரு உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கி, ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.