செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் ,  ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கேன்ஸ் விழாவில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக அவரே பேட்டி அளித்து உறுதி செய்தார்

பேட்டி ஒன்றில் விக்ரம் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவது உண்மை தான். நானும் அதில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

மலையாள செய்தி தொலைக்காட்சிக்கு நடிகர் ஜெயராம் அளித்த பேட்டியில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாளன்று தான் படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் ‘நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. நந்தினி மட்டுமின்றி நந்தினியின் தாயாரான மந்தாகினி தேவி என்ற ஊமை ராணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம் .

இது தவிர வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி, சுந்தர சோழனாக அமிதாப் பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் மற்றும் குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.

சமீபத்தில் சத்யராஜ் திடீரென்று விலகியிருப்பதாகக் கூறப்பட்டது. பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வான நடிகர் சத்யராஜ் படத்தில் இருந்து விலகி விட்டதால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அஸ்வின்இணைந்திருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, ”கல்லூரி மாணவனாக ‘ஆயுத எழுத்து’ படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகள் செய்தேன். தற்போது சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.