பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து சில பதிவுகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

திடீர் அறிவிப்புகள் இந்திய மக்களுக்கு பழக்கப்பட்டு போன நிலையில் இன்று அதிகாலை 2:11 மணிக்கு பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது.

500 பிட்காயின்-களை வாங்கியிருக்கும் மத்திய அரசு இன்று அவற்றை மக்களுக்கு விநியோகிக்க இருப்பதாக வெளியான டீவீட்டால் செய்வதறியாது திகைத்துப் போன மக்கள் இதனை பெறுவது எப்படி என்பது குறித்தும் எங்கு சென்று வரிசையில் நிற்கவேண்டும் என்பது குறித்தும் தெரியாமல் கேள்வி எழுப்பினர்.

பின்னர் 3:18 மணிக்கு வெளியான மற்றொரு பதிவில் “பிரதமரின் ட்விட்டர் பக்கம் சிறிது நேரம் ஹேக்” செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த நேரத்தில் வெளியான பதிவுகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த விடிந்தும் விடியாத இரவில் பிட்காயின் குறித்த மோடியின் சமூக வலைதள பதிவுகள் ஜூம்லா என்றும் பிட்காயின் குறித்து வெளியான பதிவு நீக்கப்பட்டதாகவும் தெரிந்த பின்பு அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பிரதமரின் ட்விட்டர் ஐ.டி. ஹேக் செய்யப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வரும் சிலர், “பிரதமரின் ட்விட்டர் பக்கத்தையே பாதுகாக்க முடியாத நிலையில், மக்களின் ஆதார் உள்ளிட்ட முக்கிய தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளனர்.