குளியல் காட்சி பிளாக்மெயில்…  காமுகர்களால்  தீக்குளித்த சிறுமி….
வேலூர் அருகேயுள்ள பாகாயம் காவல் எல்லையைச்சேர்ந்த 15 வயது சிறுமி குளிக்கும் போது அதை வீடியோவாக எடுத்துள்ளனர் மூன்றுபேர். பின்னர் வீடியோவை வைத்து தங்களின் காம இச்சைக்கு இணங்க வேண்டும் என்றும்  இல்லையெனில் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என்றும் சிறுமியை மிரட்டி உள்ளனர் இதைத் தொடர்த்து அவமானத்திற்குப் பயந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அச்சிறுமி.
பூனைக்கண்ணன் (எ) ஆகாஷ் (22), கணபதி (19) மற்றும் 17 வயது மைனர் பையன் மூவரும் தான் இந்த கொடுமையைச் செய்துள்ளனர்.  பெற்றோர் வேலைக்குச் சென்று விட, சனிக்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்த இச்சிறுமி இவர்களின் மிரட்டலுக்குப் பயந்து இப்படி ஒரு அதீதமான முடிவை எடுத்துள்ளார்.  இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போராடி நெருப்பை அணைத்துள்ளனர்.
பின்னர் கார்பெண்டரான இவரது தந்தைக்குத் தகவல் சொல்லி அனுப்பியதுடன் ஆம்புலன்ஸை அழைத்து வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு 90% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் அச்சிறுமியின்  நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகத் தெரிகிறது.
பாகாயம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுபா, அச்சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் இம்மூவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.  இவர்கள் குடியாத்தம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மைனர் பையன் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவனைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளித்த சிறிது நேரத்திலேயே சிறுமி  சுயநினைவை இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.  90% தீக்காயங்கள் என்பதால் இன்னமும் ஆபத்தான கட்டத்திலேயே இருக்கிறார் அச்சிறுமி.
– லட்சுமி பிரியா