டில்லி:

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

65 வயதாகும் அருண்ஜெட்லி சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த திங்கள்கிழமை முதல் அவர் அலுவலகத்துக்கு வரவில்லை. அதோடு ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் இது வரை பதவியும் ஏற்கவில்லை.

பாதுகாக்கப்பட்ட சூழலில் வீட்டிலேயே வசித்து வந்த அவர் இன்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நாளை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான கொடையாளர் நடைமுறைகள் அனைத்தும் முடிந்துள்ளது.

உடல் நிலை பாதிப்பு காரணமாக லண்டனில் அடுத்த வாரம் நடைபெற 10வது பொருளாதார மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டது. தனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவலை ஜெட்லி நேற்று டுவிட்டரில் வெளியிட்டார். ஜெட்லி விரைந்து குணம் பெற பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.