சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கியில் பட்டப்பகலில் நடைபெற்ற  கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் ஒருவரின் வீட்டில் இருந்து ஏராளமான நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல்துறையினருக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை செயல்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில், வங்கிக்கொள்ளையில் காவல்துறையைசேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த 13 ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியில் இருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருத்து கொடுத்து, வங்கி ஊழியர்களை கத்தி காட்டி மிரட்டி, பாதுகாப்பு பெட்டக அறையின் சாவி வாங்கி 11 கோடி மதிப்பிலான சுமார் 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் வங்கி ஊழியர்களை கை கால்களை கட்டி போட்டு, வாயில் துணை வைத்து அறையை பூட்டி விட்டு கொள்ளை கும்பல் தப்பித்துள்ளது. வங்கியில் பட்டப்பகலில் நடந்தேறிய இந்த கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த கொள்ளை விவகாரத்தில்  இதுவரை முக்கிய குற்றவாளி முருகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட  கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோவில், 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகளை உருக்கித் தருவது தொடர்பாக பேரம் பேசிய கோவை நகை வியாபாரியின் உறவினரிடமும் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட  முக்கிய குற்றவாளி முருகனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்ததாக கூறிய முருகன், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளான். மேலும் வங்கியில் எப்படி கொள்ளையடிப்பது, போலீசிடம் சிக்காமல் எப்படி தப்பிப்பது என்பது குறித்து  நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதம் ரகசிய திட்டமிட்டதாகவும் கூறி திடுக்கிட வைத்துள்ளான்.

கொள்ளைக்கு தேவையான பைக், கார்கள் நண்பர்களிடம் இருந்து வாங்கியதாகவும் அரும்பாக்கம் வங்கியைத் தவிர மற்ற வங்கியிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தாகவும்,  மேலும் வலிமை படத்தில் வரும் வசனத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பாக முருகன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் சென்னை அருகே உள்ள அச்சரப்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்த நிலையில், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் மூணரை கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.