சிதம்பரம்: பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் மற்றும் முருகன் கோவில்களில் ஆரூத்ரா தரிசனம் விழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடவுள் சிவனின் நட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமி தினமும் இணையும் நாளில் ஆருத்ரா தரிசனம் நாடு முழுவதும்  உள்ள சிவன் கோவில்களில்  நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் நடராஜருக்கு ஆறுவிதமான அபிஷேகங்களைச் செய்து அவரை குளிர்விப்பார்கள். இந்த நாளை ‘மார்கழி திருவாதிரை’ என்றும் அழைக்கப்படுகிறது. 

மார்கழி மாத ஆருத்ரா தரிசனம்  சிறப்பு வாய்ந்தது திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள். மார்கழி மாதம் வரும் திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜைசெய்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நேற்று தொடங்கியது.
இந்த ஆண்டு  இன்று சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட உலகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்  நடைபெற்று வருகிறது. ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி புண்ணியம் பெற்றிடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி,  மார்கழியின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (20-ந் தேதி) காலை 9 மணிக்கு நடராஜ பெருமாள்உடனுறை சிவகாமியம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று, பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பகல் 12 மணிக்கு நடராஜ பெருமானுக்கு உரிய ராகம், தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ஆரூத்ரா தரிசனத்தின்போது,  மூலவரான நடராஜ பெருமானே நேரடியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதனால் ஆரூத்ரா தரிசனத்தைக் காண உலகம் முழுவதும் சிவபக்தர்கள் சிதம்பரத்துக்கு வந்து சிவபெருமானின் ஆசி பெற்று செல்வர்.
முன்னதாக நேற்று, பக்கதர்களின் போராட்டத்தை தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நடத்தவும், ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் பங்கேற்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று  நேற்று காலைதேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், சிறப்பு அலங்காரங்கள் செய்து, பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் காலை 7 மணி அளவில் கீழ வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

 தேரோட்டத்தை முன்னிட்டு 4 வீதிகளிலும் பெண்கள் கோலமிட்டு தேர்களை வரவேற்றனர். சிவனடியார்கள் மேளதாளங்கள் முழங்கவும், பல்வேறு இசை வாத்திய கருவிகளை இசைத்தபடியும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

தேரோட்டம் முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் இறக்கப்பட்டு, கோவிலுக்குள் ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு இரவு 8.30 மணி முதல் விடிய, விடிய லட்சார்ச்சனை நடந்தது.

இதையடுதுது  விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று காலை (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிகாலை 2 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலா வந்த பிறகு, மாலை 3 மணி அளவில் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு ஆருத்ரா தரிசன விழா நடைபெறும்.

அதாவது ஆயிரங்கால் மண்டபம் முன்பு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் 3 முறை முன்னும், பின்னும் ஆடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்கள். இதுவே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

நாளை டிசம்பர் 21ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

ஆரூத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.