சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்ட பொறியியல் பாடத்திட்ட மாற்றம்  செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து, கலை அறிவியல் பாடத்திட்டமும் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதற்காக,  90 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி உள்ளது.  இந்த நிலையில், தற்போது கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த மண்டல மாநாட்டில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, பொறியியல் பாடத்திட்ட மாற்றம் போல, கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும் கூறினார்.  பொறியியல் முதலாமாண்டு, 2-ஆம் ஆண்டுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டதுபோல் மூன்றாம் ஆண்டுக்கும் புதிய பாடத்திட்டம் வரும். முன்பிருந்த பாடத்திட்டத்திற்கு பதில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப பாட திட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என கூறியவர்,  நான் முதல்வன் திட்டத்தில் என்ன மாதிரியான பாடத்திட்டம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், கல்லூரி பேராசிரியர்கள் அவற்றை தெரிந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.