சென்னை:
மீன்பிடித்துறைமுகமான காசிமேட்டில் அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணி வரை மட்டுமே மீன் விற்க அனுமதிக்கப் படும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர்  சென்னையில் கொரோனா பாதிப்பு 87,235 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும்  தொற்று பரவல் அதிகரித்தே வருகிறது.  குறிப்பாக மார்க்கெட் பகுதிகள், மீன் சந்தை போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரத்தில் உள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்க கூட்டம் கூடுவது வாடிக்கையாகி வருகிறது.  இதனால், அங்கு மீன் வாங்க தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது.
அதன்படி,
காசிமேட்டில் இருந்து நாள்தோறும் கடலுக்கு 70 விசைப்படகுகள் வரை மட்டுமே மீன்பிடிக்க  அனுமதி அளிக்கப்படும்.
காசிமேடு பகுதியில் மின் விற்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணி வரை  மட்டுமே.
பொதுமக்கள் மீன் துறைமுகத்திற்குள் மீன்வாங்க அனுமதி கிடையாது.
மீன்பிடி இறங்குதளத்தில் மீன் விற்பனை செய்ய 50 விசைப்படகுகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.