திருச்சி:

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் 21ம் தேதிக்கு பிறகு மீண்டும் டில்லியில் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் அய்யாகண்ணு,  “முதல்வர் பழனிச்சாமி மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மே 15 ஆம் தேதிக்குள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தத காரணத்தினால்தான்  எங்களது டில்லி போராட்டத்தை  ஒத்திவைத்தோம்.

ஆனால் இதுவரை எந்த அறிவிப்பையும் மத்திய, மாநில அரசுகள் வெளியிடவில்லை. மே 15ம் தேதிக்குள் விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 21ந் தேதிக்கு பின்னர் டில்லியில் மீண்டும் தொடர் போராட்டத்தைத் துவங்குவோம்”  என்று  அய்யாக்கண்ணு தெரிவித்தார்.