டில்லி:
பாகிஸ்தானுக்குள் புகுந்து, அங்கு பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் அபிநந்தன் படைப்பிரிவு உள்பட 2 படைப் பிரிவுகளுக்கு விமானப்படை தளபதி பாராட்டுச் சான்று வழங்கி கவுரவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதன்பின்னர் 27-ந் தேதி, பாகிஸ்தான், தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. அந்த விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர்.
அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். பாலக்கோட் தாக்குதலில் 9வது படைப்பிரிவு மற்றும் அபிநந்தனின் 51வது படைப்பிரிவு ஈடுபட்டது.
இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விமானப்படை தொடங்கப்பட் நாள் விழா நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் விமானப்படை தொடக்க நாளைமுன்னிட்டு, வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானத் தளத்தில் இன்று அணிவகுப்பு வழியாக மிக் பைசன் விமானத்தில் பறந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அபிநந்தன் படைப்பிரிவு உள்பட இரண்டு படைப்பிரிவுகளுக்கும் வீர தீரச்செயல்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாராட்டு சான்றிதழை படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகளிடம் விமானப்படை தளபதி பதாரியா வழங்கி கவுரவித்தார்.