சென்னை: “கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏழை மக்களின் பசியை போக்கும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதுபோல, திமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் உணவகம் திறக்கப்படும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி, ஆட்சி பொறுப்பேற்ற நிலையில். கலைஞர் உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடைபெற்ற  உணவு பொது வினியோக துறையின் மத்திய மந்திரி பியூஸ் கோயால் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக உணவு அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழக மக்களுக்கு சத்தான உணவுப்பொருட்கள் வழங்கும் பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்‘ அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறியதுடன்,  அனைத்து மக்களுக் கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதற்காக ரூ.300 கோடி செலவு செலவிடப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 407 உணவகங்களும், 14 மாநகராட்சி களில் 105 உணவகங்களும், நகராட்சிகளில் 138 உணவகங்களும், கிராம பஞ்சாயத்துகளில் 4 உணவகங்களும் செயல்படுகின்றன. ஒவ்வொரு உணவகம் மூலமாகவும் சராசரியாக நாளொன்றுக்கு 200 முதல் 400 நபர்களுக்கு முழு உணவு அதிக மானியம் கொடுத்து குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் ரூ.978 கோடி செலவில் 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்களும் ரூ.4 ஆயிரம் ரொக்க தொகையும் வழங்கப்பட்டன. வருகின்ற 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.1161 கோடி மதிப்பீட்டில் 2.15 கோடி அட்டைதாரர்களுக்கு 20 வகையான உணவுப்பொருட் கள் வழங்கப்படவுள்ளன.

மேலும், விளிம்பு நிலையிலுள்ள வறியவர்களுக்கு உணவுப் பாதுகாப்பினை சமூக உணவகங்கள் மூலமாக உறுதி செய்திடும் வகையில் இதற்கு முந்தைய கூட்டத்தின்பொழுது குறிப்பிட்டவாறு “கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்.

இவ்வாறு  பேசினார்.