சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக அனுதாபி ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து, மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  திமுக அனுதாபி ஞானசேகரன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, இந்த வழக்கில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை, ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை  சென்னை சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரிக்கப்பட்டு வந்தது.. அப்போது, ஞானசேகரனிடம் சிறப்பு புலானாய்வு குழு விசாரணை நடத்தியதன் அடிப்படையில், முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஞானசேகரின் வாக்குமூலம், அவரது வீட்டில் இருந்து கைப்பற்ற ஆவணங்கள், அவனின் மொபைல் போன், அதில் இடம் பெற்றுள்ள உரையாடல்கள் தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிக்கை நகலானது இன்று ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டது. இதை கையெழுத்திட்டு ஞானசேகரன் பெற்றுக் கொண்டான்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக,  டிசம்பர் 23 அன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். குற்றம் சாட்டப்பட்டவர் ஞானசேகரன் என்ற திமுக நபரும் அந்த பகுதியில் பிரியாணி கடை  நடத்தி வருபவருமான ஒருவர்  அடையாளம் காணப்பட்டார். தாக்குதலை படம்பிடித்து பாதிக்கப்பட்டவரை மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவர் சார் என யாரிடோ பேசியதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து யார் அந்த சார்? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் FIR கசிவு இரண்டையும் விசாரிக்க ஒரு SIT ஐ அமைத்தது. கசிவுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், சென்னை காவல் ஆணையர் A. அருண் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்,  டிசம்பர் 28 அன்று, சென்னை உயர் நீதிமன்றம், பாலியல்

வன்கொடுமை மற்றும் எஃப்.ஐ.ஆர் கசிவு இரண்டையும் விசாரிக்க பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. சிறப்பு விசாரணைக் குழுவில் அண்ணா நகர் காவல் துணை ஆணையர் பூக்யா சினேகா பிரியா; ஆவடி டி.சி.பி (சட்டம் மற்றும் ஒழுங்கு) அய்மன் ஜமால்; மற்றும் சேலம் நகரம் (வடக்கு) டி.சி.பி எஸ். பிருந்தா ஆகியோர் உள்ளனர். இந்தக் குழுவிற்கு உதவியாக சைபர் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவேந்திரா கே. ரவி செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படுவதற்கு வழிவகுத்த FIR ‘கசிவு’ குறித்து விசாரித்து வரும் விசாரணை குழுவினர், பாதிப்பு உள்ளான மாணவியின் எஃப்ஐஆர் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக 4 பத்திரிகையாளர்களின் செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் தமிழ்நாடு காவல்துறை வலைத்தளத்திலிருந்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்திருந்தனர். இதை எதிர்த்து பத்திரிகையாளர்களும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.