சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் 2 எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற் படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று  பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா, குழலி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந் நிலையில், வழக்கில் நீதிபதி புகழேந்தி இன்று தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில் அவர் கூறியதாவது: மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தரப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தாண்டு மத்திய அரசின் 49.9 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில்  மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்  என்று தீர்ப்பளித்தார்