புனே: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு நேற்று மாலை திடீரென  நெஞ்சுவலி  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

சமூக ஆர்வலரான அன்னா ஹசரேவுக்கு 84 வயது ஆகிறது. இவர் கடந்த 2011-ல் ஊழல் தடுப்பு இயக்கத்தை தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், 2011 ஏப்ரலில், 12 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு, நாடெங்கும் உள்ள மக்களின் கவனத்தை பெற்றவர்.

வயது முதிர்வு காரணமாக இவர், மகாராஷ்டிராவில் உள்ள ரேலேகான் சித்தி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது இருதயத்தில் கரோனரி தமனியில் ஒரு சிறிய அடைப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதை வெற்றிகரமாக சரி செய்தனர். இதையடுத்து  அவர் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஹசாரேவின் உடல்நிலை சீராக இருப்பதாவும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அவ்தத் பொடம்வாட் தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரே விரைவில் குணமடைய, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.