தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.238 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

2 நாள் பயணமாக நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளார். தஞ்சாவூரில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில்  அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மூப்பனார் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் 11 அடி உயரமுள்ள முழு உருவச்சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, இன்று காலை  தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு,  44,525 பயனாளிகளுக்கு ரூ.238 கோடியே 40 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கருணை அடிப்படையில் 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து,  ரூ.98 கோடியே 77 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 90 பணிகளை தொடங்கி வைத்ததுடன், , இதேபோல் தஞ்சாவூர், கும்பகோணம், மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என 134 பணிகளுக்கு ரூ 894 கோடியே 56 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கலும்  நாட்டினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு. தஞ்சையை பெருமைபடுத்திய அரசு திமுக அரசு தான்.

தஞ்சாவூர் என்றாலே காவிரி, காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றத்தை அமைக்க முதல் முதலில் வலியுறுத்தியவர் கருணாநிதி. காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம் தி.மு.க. காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்கச் செய்தவரும் கலைஞர் தான் என்றார்.

மேலும், தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் பெறப்பட்ட 48 ஆயிரம் மனுக்களில் 22 ஆயிரம் மனுக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்வு கண்டுள்ளார் என்றவர்,  கொரோனா தாக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

முன்னதாக தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.