ச்சர்லா, ஆந்திரா

ந்திர மாநில ஆளும் கட்சி எம் எல் ஏ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. அங்கு தேர்தல் நேரத்திலும், முடிந்தபிறகும் அங்கு வன்முறை நடந்ததையடுத்து மாநில தலைமைச்செயலாளரையும், காவல்துறை டி.ஜி.பி.யையும் தலைமை தேர்தல் ஆணையம் நேரில் அழைத்து கண்டித்தது. சில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிலர் பணியிடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் பல்நாடு மாவட்டம் மச்சர்லா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பலவாக்கேட் வாக்குச்சாவடியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இ்ந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்பின்னர் மாநில தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் எம்.எல்.ஏ.வை கைது செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினர் எம் எல் ஏ மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.  வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ‘சிப்’ சேதம் அடையாததால், அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டியதில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ