சென்னை: இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-க்கு முடிசூட்டப்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் ஜி.கே.மணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை அருகே உள்ள  திருவேற்காட்டில் பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அங்குள்ள  ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் காலை 11 மணியளவில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். தலைவா் ஜி.கே.மணி முன்னிலை வகித்துப் பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி. கட்சிய்ன புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை முன்மொழிந்து பேசினார் . இதையடுத்து அன்புமணி ராமதாஸ் பாமகவின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அன்புமணியை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டித் தழுவி கண்ணீர்மல்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், கட்சிக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பொருட்டு, பாமக இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பாமக தலைவர் பதவியில் இருந்து  ஜி.கே.மணிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

தற்போது, ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் அன்புமணி ராமதாஸ், கட்சயின் இளைஞர் அணி தலைவராக இருந்து வரும் நிலையில், அவர் கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

2023ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும்,  கட்சியை பலப்படுத்தும் வகையிலும், மாநிலம் முழுவதும் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம்மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவேகடந்த 2019ம்ஆண்டே  அன்புமணியை தலைவராக்க டாக்டர் ராமதாஸ் முயற்சி செய்து,  செயல்தலைவர் பதவி வழங்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு பாமக மூத்த தலைவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததால், அது கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், இன்று சிறப்பு பொதுக்குழுவை கூட்டி, தனது மகன் அன்புமணியை கட்சி தலைவராக மூடிசூட்டி அழகு பார்த்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.