ஸ்டாவெஞ்சர், நார்வே

நார்வே நாட்டில் நடைபெறும் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தற்போது நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் 10 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  இந்தத் தொடரின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் ஆசிரியரான விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவை வீழ்த்தியிருந்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது சுற்றில், பல்கேரியாவின் வெசெலின் டோபலோவை விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார்.  இப்போட்டியில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் 36-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

இவ்வாறு அடுத்தடுத்த இரு வெற்றிகளின் மூலம் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

அடுத்ததாக அமெரிக்காவின் வெஸ்ஸி சோ 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். மேலும் நெதர்லாந்தின் அனிஷ் கிரி 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் 2.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.