கர்னால்

காங்கிரஸ் ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக்  கிடப்பில் போட்டதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரியானாவின் கர்னால் நகரில் பாஜக சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அமித்ஷா தனது உரையில்,

“இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக் காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. இந்நாட்டு மக்கள் மோடியை இரண்டாவது முறையாகவும் பிரதமராக்கினார்கள். மோடி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையைத் தொடங்கி தற்போது கோயில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. 

அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அன்று ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் விழா நடைபெற  உள்ளது.கோவிலுக்கான  பூமி பூஜையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சிலை பிரதிஷ்டையிலும் பங்கேற்க இருக்கிறார். 

அனைத்து அரியானா மக்களும் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று ராமரைத் தரிசிக்க வேண்டும். மோடி அரசு மத்தியிலும் மாநிலத்தில் மனோகர் லால் கட்டா அரசும் உள்ளன. யாரும் இந்த இரு அரசுகள் மீதும் யாரும் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. 

நான் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினால், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் கட்டார் செய்த பணிகளைப் பாருங்கள்” 

என்று கூறினார்.