டெல்லி: தமிழக அரசியல் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி ‘பொது சிவில் சட்டம்-2020’ தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காக குழு அமைக்கக் கோரி, மாநிலங்களவையில்  தனிநபா் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுசிவில் சட்டம் என்பது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெறக் கூடிய ஒன்று. நாட்டு மக்கள் அனைவரும் பொதுவாக ஒரே வகையான சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த சட்டம் குறித்து சட்ட ஆணையம் பரிசீலித்து வருகிறது. மேலும் மக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்ட மசோதா,  மாநிலங்களவையில் ஏற்கனவே அறிமுகத்துக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், மசோதா அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போதைய குளிா்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா அறிமுகமாகியுள்ளது.

இந்த  ‘பொது சிவில் சட்டம்-2020’ என்ற இந்த மசோதாவை,  பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா மாநிலங்களவையில் நேற்று (09-12-22) அறிமுகப்படுத்தினாா். அதில், பொது சிவில் சட்டம் உருவாக்கம், தேசிய அளவிலான அமலாக்கம் மற்றும் அதுதொடா்பான விவகாரங்களுக்காக தேசிய கண்காணிப்பு மற்றும் விசாரணைக் குழுவை அமைக்க கோரப்பட்டுள்ளது.

இந்த மசோதா அறிமுகத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.   காங்கிரஸ் கட்சி,  திமுக, மதிமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

பொதுசிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், நாட்டின் சமூக கட்டமைப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை அழிந்துவிடும் என்று அக்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. ஆனால் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மசோதாவை அறிமுகப்படுத்தும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நடத்தினாா். அதில், தீா்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 23 வாக்குகளும் பதிவாகின.

மந்த மசோதா குறித்து கூறிய மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ‘அவையில் ஒரு விவகாரத்தை எழுப்புவது உறுப்பினரின் சட்டபூா்வ உரிமை. அதன் மீது விவாதம் நடைபெற அனுமதிக்கப்பட வேண்டும். அறிமுக நிலையிலேயே மசோதாவை எதிா்ப்பது முறையற்றது’ என்றாா்.

மசோதா குறித்து பேசிய மதிமுக எம்.பி. வைகோ,  ‘ஆா்எஸ்எஸ்-இன் சித்தாந்தங்களை ஒன்றன் பின் ஒன்றாக மத்திய பாஜக அரசு அமல்படுத்துகிறது. ஏற்கெனவே காஷ்மீரை முடித்துவிட்டனா். இப்போது பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுத்துள்ளனா். இது நாட்டின் பேரழிவுக்கு வழிவகுக்கும். சிறுபான்மையின மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவா்’ என்றாா்.

மசோதா குறித்து பேசிய திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா, மதச்சாா்பின்மையும் கூட்டாட்சியும்தான் இந்த நாட்டின் அடிப்படை. இவை இப்போது ஆபத்தில் உள்ளது. இது ஒரு தனியாா் மசோதாவாக இருந்தாலும், இந்த மசோதா இங்கே நிறைவேற்றப்பட்டால், நாளை ஏதாவது நடக்கலாம் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம். இந்த நாட்டின் எதிா்காலம், அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தனித்துவம் பேணப்பட வேண்டும். இந்த மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டாம் என்றாா்.

மசோதா குறித்து பேசிய ‘திரிணமூல் காங்கிரஸின் ஜாவா் சிா்காா் பேசுகையில், ‘இந்த தனிநபா் மசோதா, அரசியல் சாசனத்துக்கும் நெறிமுறைகளுக்கும் மதச்சாா்பின்மைக்கும் முற்றிலும் புறம்பானது. இதன்மூலம் ஆபத்தான விளையாட்டில் மத்திய அரசு ஈடுபடுகிறது’ என்றாா்.

மசோதா குறித்து பேசிய சமாஜவாதியின் ராம் கோபால் வா்மா இந்த மசோதா அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டினாா்.

இந்த மசோதா குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸின் பெளசியா கான், அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு எதிரானது என்று  வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில்தான் இந்திய ஜனநாயகத்தின் அழகும் தனித்துவமும் அடங்கியுள்ளது. அதை காப்பது மிக முக்கியமானது. பன்முகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் இம்மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும்’ என்று  குறிப்பிட்டாா்.

இதற்கிடையில் பொதுசிவில் சட்ட மசோதா குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கரி,  ‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமலாக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுவே தேசத்துக்கும் மனித குலத்துக்கும் நல்லது’ என்றாா்.