போபால்,

மத்தியபிரதேசத்தில் படிபடியாக மதுவிலக்கு அமலாக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேசத்தில் உள்ள சாகர்,புரான்புர்,விடிசா,நர்சிங்பூர், சாட்னா உள்பட பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை மூடவலியுறுத்தி கடந்தமாதம் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அடுத்து கடந்த 5 ம் தேதி மத்திய பிரதேசம் ரெய்சன் மாவட்டத்தில் நெடுஞ்சாலையிலிருந்த மதுக்கடையை அகற்றிவிட்டு அதை அருகிலிருக்கும் பேரலி என்ற ஊரில் திறக்க முடிவெடுத்தனர்.

ஆனால் அங்கே திறக்கக் கூடாது என மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்நிலையில் நர்சிங்பூர் மாவட்டத்தின் நீம்கேரா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான், முதல் கட்டமாக நர்மதை ஆற்றின் இரு கரைகளிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் மதுக்கடைகள் அகற்றப்படும் என்றார். அதையடுத்து குடியிருப்புகள், கோயில்கள், கல்விநிலையங்கள், இருக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், குடிநோயிலிருந்து மீட்க மாநிலம் முழுவதும் மறுவாழ்வு மையம் நடத்தப்படும் என்றும் சவ்ஹான் கூறினார்.