சென்னை:
னைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், சுகனேஸ்வர் கோயில் ஆகம விதிகளின் அடிப்படையில் இல்லை” என கூறியிருந்தார்.

நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்து அறநிலை துறை சார்பில் குறிப்பிட்ட கோவில்களில் பின்பற்றக்கூடிய மரபை முடிவு செய்ய அந்த கோவில் அர்ச்சகர்களிடமிருந்து, தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “யார் வேண்டுமாலும் அர்ச்சகர் ஆகலாம். குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை” என்றார்.

ஏற்கனவே, ஆகம கோவிலிகள் எது, ஆகமம் பின்பற்றாத கோயில்கள் எது என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு குழு அமைத்தை சுட்டி காட்டிய நீதிபதி, குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை என்றும், அந்தந்த கோயில்களின் பதிவேட்டில் கூறப்பட்ட ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ஆகம கோயில்களில் அர்ச்சகர்களை பரம்பரையாக தான் நியமிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவு உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது.

எனவே இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி இதே மனுதாரர்தான் ஆகம கோவில்கள் எது, ஆகமம் பின்பற்றாத கோயில்கள் எது என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் 2,405 அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குழு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் ஆகம கோவில் தான் என எப்படி முடிவு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து இந்து அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் மறுத்துவிட்டனர்.