வேலூர்
மணப்பாறை அருகே சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்ததை அடுத்து பயனற்ற அனைத்து ஆழ்த்ளைக் குழாய்க் கிணறுகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி அருகில் உள்ள மணப்பாறை பகுதியில் உள்ள நடுக்காட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட ஆழ்துளைக் குழாய்க் கிணறு நீர் இல்லாததால் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அது மூடப்படாமல் இருந்ததால் அந்த கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்து விட்டான். கடந்த நான்கு நாட்களாக சுர்ஜித் ஐ மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது போல் மாநிலங்களில் பல ஆழ்துளைக் குழாய்க் கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. நீர் இல்லாமல் இவ்வாறு கவனிக்காமல் விடப்படும் குழாய்க் கிணறுகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என ஏற்கனவே அரசு பல முறை உத்தரவிட்டுள்ளது. ஆயினும் பல கிணறுகள் மூடப்படாமல் அபாயமாக உள்ளன.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், “வேலூர் மாவட்டத்தில் ஏராளமான ஆழ்துளைக் குழாய் கிணறுகள் நீர் இல்லாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. எனவே இந்த குழாய்க் கிணறுகள் அனைத்தும் உடனடியாக மூட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.