திருச்சூர்

பிரபல மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் பட இயக்குநர் சச்சி என்னும் சச்சிதானந்தன் திருச்சூரில் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

மலையாள திரையுலகில் கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முக திறமை கொண்டவர்களில் சச்சி என அழைக்கப்படும் கே ஆர் சச்சிதானந்தனும் ஒருவர் ஆவார்.  இவர் சமீபத்தில் இயக்கி வெளிவந்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் மலையாள மக்களை மட்டுமின்றி வெளி மாநிலத்தவரையும் கவர்ந்தது.

இந்தப் படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடித்திருந்தனர்.  இந்த திரைப்படத்தில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   கடந்த பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியானது.   ஏற்கனவே கடந்த 2015 ஆம் அண்டு அனார்கலி என்னும் திரைப்படத்தை சச்சி இயக்கி உள்ளார்.

இவருக்கு இரு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சூரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது 48 வயதாகும் சச்சிக்கு திடீரென இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு சச்சி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.  சச்சியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.