டில்லி,

ர்செல், மேக்சிஸ் வழக்கு தொடர்பாக வரும் அக்டோபர் 4 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கனவே கடந்த 14ந்தேதி விசாரணைக்கு வர கார்த்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாததால், அவரது வங்கி கணக்குகளை முடக்கியது.  தற்போது மீண்டும் வரும் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்பி நெருக்கடி கொடுத்து வருகிறது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக   முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு விவகாரத்தில்  கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது.  அதில், சி.பி.ஐ. டில்லி அலுவலகத்தில் இன்று நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த 26ம் தேதி முடக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 4 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த முறையும் அவர் ஆஜராகா விட்டால் அவரை கைது செய்ய சி.பி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து  விசாரணை என்ற பெயரில் அவரை அலைக்கழித்து வருகின்றனர். சிபிஐ கொடுத்து வரும் தொடர் நெருக்கடி காரணமாக கார்த்தி சிதம்பரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.