மும்பை: ஏர் இந்தியா ரூ .80,000 கோடி கடனாகக் கொண்டிருப்பதால் அதைத் தனியார்மயமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தனியார்மயமாக்கல் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விமான நிறுவன தொழிற்சங்கங்களிடம் 2ம் தேதியன்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் சுமார் 13 ஏர் இந்தியா தொழிற்சங்கங்களுடனான சந்திப்பில் பூரி, தனியார்மயமாக்கலுக்குப் பிந்தைய வேலை பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஊழியர்களின் கவலைகளை தீர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறியதாகவும் ஒரு தொழிற்சங்க பிரதிநிதி தெரிவித்தார்.

“ஏர் இந்தியாவுக்கு ரூ .80,000 கோடி கடன் உள்ளது என்றும் அதற்கு எந்த நிபுணரும் தீர்வு காணவில்லை என்றும் அமைச்சர் கூறினார். இந்த சூழ்நிலையில், அரசாங்கத்திற்குத் தனியார்மயமாக்கல் மட்டுமே எஞ்சியுள்ளது” என்று தொழிற்சங்க பிரதிநிதிகளில் ஒருவர் சுமார் ஒரு மணி நேரம் நடை பெற்ற கூட்டத்திற்கு பின்னர் பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

பூரி, தேசிய விமான நிறுவனத்தின் முதலீட்டு பணிகளை மேற்கொள்வதில் அனைத்து விமான சங்கங்களிடமிருந்தும் ஒத்துழைப்பு கோரினார் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம், ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர், ஜூன் மாதத்திற்குள் ஒரு புதிய முதலீட்டாளர் வராவிட்டால், இப்போது செயல்படாத ஜெட் ஏர்வேஸைப் போலவே  ஏர் இந்தியாவும் வணிகத்திலிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறினார்.