சென்னை: நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்  என துணை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பியது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அதிமுக உள்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக  ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், இன்று அதிமுக தரப்பில் இருந்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போதும் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி, பின்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அது திருப்பி அனுப்பப்பட்டது.  இந்த நிலையில், தற்போதும், கவர்னர் திருப்பி அனுப்பியது குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட  சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நீட் விலக்கு தொடர்பான தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.