சென்னை: இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிய நிலையில்,  அவர்களின்  கோரிக்கையை ஏற்று ஓ.பன்னீர்செல்வம்  அதிமுகவில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு எதிரான ஓபிஎஸ்-ன் நீதிமன்ற வழக்குகள் பொய்த்துபோனதால், இன்று திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் கூடி, நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,  அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு  நடைபெற்றது. இக்கூட்டத்தில்  எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் உள்பட விதிகளில் பல திருத்தம் செய்து, பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழுவில் பேசிய முக்கிய  தலைவர்கள் பலர், அதிமுகவின் அழிவுக்கு ஓபிஎஸ்தான் காரணம், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுபோல, பொதுக்குழு உறுப்பினர்களும்,. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, “பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார்” என்றார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றும் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில்,  ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கபப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.