சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி கோரி காவல்ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக, பெரும் இழுபறிக்கு பின்னர்  எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கொறடா உள்பட முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில், சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இபிஎஸ், ஒபிஎஸ் இடையேயான பனிப்போரும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.

இந்த நிலையில்,  அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு தரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா ஆகியோர் இதுவரை தேர்வு செய்யப்படாத நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று கூறினார்.

மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும்,  திமுக – அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதம் தான். ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் அதிகளவு வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளோம் என்று கோரினார்.

சசிகலா குறித்து  கேள்விக்கு பதில் அளித்து பேசிய ஜெயக்குமார், சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலை தொடரும். புதிதாக அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய மாட்டோம். ஈபிஎஸ்- ஓபிஎஸ் கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் கூறினார்.