சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து எடப்படி தரப்பு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. இதனால் இன்றைய தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று கூறி அதை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

ஜூன் 11ந்தேதி எடப்பாடி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் கூறியதுடன்,  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவித்து உள்ளது.
தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய இரு நீதிபதிகள் அமர்வு,  கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவானது கடந்த 25 ஆம் தேதி நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், நர்மதா சம்பத் ஆகியோர் வாதிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி, வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.