சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னை  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து அவர் பல்வேறு நோய்களக்கு மருந்து எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்  நிலையில் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.