தே.மு.தி.க.வுக்கு கேட்டதை கொடுத்தது அ.தி.மு.க….கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுவது உறுதி

‘’மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தி வருகிறோம்’’என்று பாதி உண்மை சொன்ன தே.மு.தி.க.துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ்,மீதி பாதி உண்மையை மறைத்து விட்டார்.

அந்த கட்சி அ.தி.மு.க.வுடனும் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளது.

அதனை ‘பளிச்’சென்று  சொல்லாமல் ‘’இதர கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது’’ என்று பூடகமாக குறிப்பிட்டார்.

அ.தி.மு.க.கூட்டணியில் பா.ஜ.க.,பா.ம.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. மற்றும் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ் ஆகியோர் இடம் பெறுவது உறுதி என்றாலும்-

தே.மு.தி.க,வுடனான இடபங்கீட்டை மட்டுமே உறுதி செய்துள்ளது.

விஜயகாந்த் கேட்டபடி -3 இடங்களை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது-அ.தி.மு.க.மேலி டம்.

எல்.கே.சுதீஷ் போட்டியிட விரும்பும் –கள்ளக்குறிச்சி தொகுதியை அவருக்கே ;அலாட்’செய்தாகி விட்டது.

சேலம், மற்றும் மதுரை தொகுதிகளையும் விஜய்காந்த் கேட்கிறார். இரண்டொரு நாளில் முடிவு செய்யப்படும்.

சுதீஷ் தவிர மற்ற 2 இடங்களில் ஆட்களை தேட வேண்டிய நிலைக்கு தே.மு.தி.க.தள்ளப்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்.

ஆட்கள்- என்பது இங்கே பணமுள்ள ஆட்கள்.

ஆரம்ப காலத்தில்  ராயப்பன், அருண் பாண்டியன், மாபா.பாண்டியராஜன் என பசை உள்ள ஆட்கள் நிறையவே  இருந்தார்கள்.

சொல்லி வைத்த மாதிரி  எல்லோரும், கூடாரம் மாறி விட- விஜய்காந்த் கட்சி பணமுடையால் தவிக்கிறது.

ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் –மதுரையில் பிரேமலதாவையும், சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன்ராஜூவையும் களத்தில் இறக்கும் திட்டத்தில் இருக்கிறார் –கேப்டன்.

—பாப்பாங்குளம் பாரதி