மும்பை

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு 4 நாட்களில் 3 ஆம் முறையாகக் கொலை மிரட்டல் வந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார்.  கடந்த வெள்ளிக்கிழமை முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலில் ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் அந்தப் பணத்தை கொடுக்கவில்லை என்றால் முகேஷ் அம்பானியைக் கொலை செய்து விடுவதாக என மர்ம நபர் இ மெயிலில் மிரட்டல் விடுத்து இருந்தார்.  இந்த கொலை மிரட்டல் இ-மெயில் குறித்து காம்தேவி காவல்துறையில் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுநாளே 200 கோடி கேட்டு மீண்டும் ஒரு கொலை மிரட்டல் வந்தது. தற்போது 3-ஆம் முறையாக இ-மெயிலில் முகேஷ் அம்பானிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மர்ம நபர் ரூ.400 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.