பெரியாரை இழிவுபடுத்திய பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முதுகெலும்பில்லாத அ.தி.மு.க. அரசுக்கு தைரியம் உண்டா என நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு அங்கே வைக்கப்பட்டிருந்த லெனின் சிலை ஒன்று அகற்றப்பட்டது. இதைக் குறிப்பிட்டு பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, “இதே போல சாதிவெறி ஈ.வெ.ராமசாமியின் சிலை தமிழகத்தில் சாய்க்கப்படும்” என்று சமூகவலைதளங்களில் எழுதினார். இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான குஷ்பு, ““எச்சைக்கு” எதிர்ப்பு தெரிவிக்க “முதுகெலும்பில்லாத” அ.தி.மு.க அரசுக்கு தைரியம் உண்டா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “கமல் ரஜினி ஏதேனும் சொல்கிறார்களா என்று மட்டும் விழிகளை அகலத்திறந்துவைத்து பார்க்கிறார்கள்” என்று அதிமுக அமைச்சர்களையும் கடுமையாக கிண்டலடித்துள்ளார்.