சென்னை

செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் சரவணம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் எனக் கூறி உள்ளார்.

அமலாக்கத்துறையினனால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. எனவே வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

கடந்த 3 நாட்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி,

“கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதைச் செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது”

 என்று அறிவித்தார்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம்,

“வரும் 24-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு        மனு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியான முடிவை எடுக்கும்”

என்று தெரிவித்தார்.