பெங்களூரூ,

இந்தியாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.  இதையொட்டி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி – சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், சமமாக இருக்கும். எனவே அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

சுமார் 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளைப் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இந்த விண்கலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். இதன் மூலம் விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ அடைந்துள்ளது.