உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை கெளதம் அதானி பிடித்துள்ளார்.

அதானி வாங்கியுள்ள பல்லாயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாவிட்டால் இந்திய வங்கிகள் ‘அதோகதி’ என்று கடந்த வாரம் வெளியான ஆய்வில் கூறப்பட்டது.

இந்த நிலையில், கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களின் வங்கி சேமிப்பு பணத்தைக் கொண்டு உலகின் மூன்றாவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் அதானி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டிருக்கும் உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க், ஜெஃப் பெசாஸ் முறையே முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ளனர்.

கல்லூரி படிப்பை கூட தாண்டாத 60 வயதான அதானி, தனது 18வது வயதில் மும்பையில் வைர வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் பணியை தொடங்கி தற்போது 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 3வது பெரிய பணக்காரராக உயர்ந்திருக்கிறார்.

இந்த உச்சத்தை அடைந்திருக்கும் முதல் ஆசியர் என்ற பெருமையை அதானி பெற்றிருக்கிறார்.

சொத்து மதிப்பில் இந்தியாவின் அம்பானியை கடந்த சில மாதங்களுக்கு முன் பின்னுக்கு தள்ளிய அதானி கடந்த மாதம் பில் கேட்ஸையும் தாண்டி முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.