போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா ஐக்கிய அரபு நாடுகளில் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

மலாட் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொடுத்த பரிசு பொருளில் போதை வஸ்து இருந்ததை கண்டுபிடித்த சுங்கத்துறையினர் கிறிசனை கைது செய்து ஷார்ஜா சிறையில் அடைத்தனர்.

ஷார்ஜாவில் நடைபெறும் ஒரு ஆடிஷன் நிகழ்ச்சிக்கு நடுவராக வருமாறு கிறிசன் பெரேரா-வை அந்தோணி பவுல் என்பவர் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் சம்மதித்ததை அடுத்து விமான நிலையத்தில் அவரை சந்தித்த ராஜேஷ் என்பவர் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கவேண்டிய பரிசு கோப்பை என்று கூறி சில பரிசு பொருட்களை கிறிசன் பெரேரா-விடம் கொடுத்தனுப்பியுள்ளார்.

இந்தக் கோப்பையில் போதை பொருள் இருந்ததாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பேக்கரி தொழில் செய்து வரும் அந்தோணி பவுல் என்பவரை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

இதுபோன்ற பொருளுடன் வரும் நபர் குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தந்து வழக்கில் சிக்க வைப்பதன் மூலம் பிரபலங்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிப்பதை அந்தோணி பவுல் வாடிக்கையாக வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்ற கிறிசன் பெரேரா பின்னர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து நான்கு மாதங்கள் கழித்து நேற்று மும்பை திரும்பினார்.