டில்லி,

மிழக விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையோரம்  அமர்ந்து பலவிதமான போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போரபாடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர் சட்டை அணியாமல்  உடலில் நாமத்தைப் பூசிக்கொண்டும் கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்க விட்டபடியும் சாலையோரம் அமர்ந்தும், சாலைகளில் படுத்து உறங்கியும், அங்கபிரதட்சனம் செய்தும்  தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

நீதி கிடைக்கும் வரை டில்லியை விட்டு போகப்போவதில்லை என்றும் போராட்டக்குழுவினர் கூறி உள்ளனர்.

கடும் விமர்சனங்களுக்கு பிறகு தமிழக அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் அவர்களை சந்தித்து போராட்டத்தை வாபஸ் பெற செய்தனர். பின்னர் மத்திய அமைச்சரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் தமிழக நடிகர்கள் டில்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

நடிகர் விஷால், நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகி்யோர் டில்லி சென்று போராடும் விவசாயிகளை சந்தித்தனர்.

அப்போது விவசாயிகளிடையே பேசிய விஷால்,விவசாயிகள் பிரச்னை காலங்காலமாக இருந்து வருகிறது. நான் பேட்டிக் கொடுப்பதற்காக டெல்லி வரவில்லை. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் வீடியோ ஒன்றை நேற்றுமுன் தினம் பார்த்தேன். அதில் அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்துதான் இங்கே வந்தேன்.

சில பேருக்குப் பிரச்னை என்றால் தனிப்பட்ட முறையில் என்னால் கொடுத்து உதவிட முடியும். ஆனால் விவசாயிகளின் பிரச்னை பெரியது. அவர்கள் எதிர்பார்க்கும் தொகையும் பெரியது. எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர் வந்து அவர்களுக்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.