சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறு பரப்பியதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகரும், பிரபல செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்தபோது, எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை, இங்கு அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்தது.

மருத்துவமனைகளின் ஓனர், எம்டி என அனைவரிடம் பேசினாலும் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. அவருக்கு எப்படி கரோனா வந்தது என்றே தெரிவில்லை, காரணம் அவர் மிகவும் டிஸிபிலிண்டானவர். அதன் காரணமாக நமக்கெல்லாம் கரோனா வராது என்று நம்பிக்கையில் வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் செல்லுங்கள். அப்பொழுதும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அரசின் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்” என கூறியிருந்தார்.

இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில், தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாட்டைக் குற்றம் சொல்வதில் வரதராஜனுக்கு என்ன சந்தோஷம். எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன என்று வரதராஜன் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கரோனா சிகிச்சைக்காக படுக்கைகள் கிடைப்பதில்லை என வீடியோ வெளியிட்ட வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரதராஜனிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.