சென்னை: கொரோனா தொற்று காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு குணமடைந்துள்ளதால், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடிகர் வடிவேலு படப்பிடிப்பாக வெளிநாடு சென்றுவிட்டு, டிசம்பர் 23ந்தேதி  லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில்  எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில்,  தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, அவருக்கு ஒமிக்ரான் தொற்றா என்பதை கண்டுபிடிக்க அவரது மாதிரிகள் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

இதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, அவர் கொரோனா தொற்று சிகிச்சைகாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும், இன்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் ராமசந்திரான மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.