பெங்களூரு

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார்.

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா.  இவர் 40க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ளார்.   சில கன்னடப்படங்களை இஅக்கி உள்ளார்.   விஷால் நடித்த சத்யம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.    இவரது மனைவி பிரியங்கா திரிவேதியும் ஒரு நடிகை ஆவார்.

உபேந்திரா நேற்று தனது புதிய கட்சியை துவங்கி உள்ளார்.  அந்தக் கட்சிக்கு கர்நாடகா பிரக்ஞா வந்தா ஜனதா என பெயரிட்டுள்ளார்.   கட்சியின் துவக்க விழாவில் அவருடன் அவர் மனைவி பிரியங்கா திரிவேதி மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடி இருந்தனர்.  அவர் கட்சியை துவங்கி வைத்து உரையாற்றினார்.

மனைவியுடன் உபேந்திரா

உபேந்திரா தனது உரையில், “நான் துவங்கி உள்ள இந்தக் கட்சிக்கு தலைமை என ஒருவரும் இல்லை.  மக்களே இதன் தலைவர்கள்.   மக்களின் பிரச்னைகளை தீர்க்க முன் வருபவர்கள் யாரும் எங்கள் கட்சியின் இணைந்து தேர்தலில் போட்டி இடலாம்.   தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றிபெறுவோம் என்னும் எண்ணம் எங்களுக்கு இல்லை.  இம்மாநிலத்தை முன்னேற்ற மட்டுமே எண்ணி உள்ளோம்.

நாங்கள் மக்களுக்கு சேவை ஆற்ற வந்துள்ள ஊழியர்கள்.  ஆனால் எங்களை பலர் குறை கூறுகின்றனர்.  அதற்காகவே நாங்கள் கட்சியை துவங்கி உள்ளோம்.   குறை கூறுபவர்களுக்கு மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்” என கூறி உள்ளார்.   தாங்கள் ஊழியர்கள் என்பதைக் குறிப்பது போல் உபேந்திரா, பிரியங்கா, மற்றும் அவர் ஆதரவாளர்கள் அனைவரும் காக்கி உடையில் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.